Pages

Showing posts with label bala. Show all posts
Showing posts with label bala. Show all posts

Saturday, February 07, 2009

நான் கடவுள்



"நானே கடவுள் " என்ற பிரம்மத்தை உணர்ந்த ஒருவன், சதை , உறவு, இன்பதுன்பம், பாவம் என்று சாமானியனாய் வாழும் சமூகத்தில் நுழைந்தால்? ...பாலாவின் முத்திரையுடன் வரைந்த திரையோவியம்.

தமிழ் உலகு, வருடக்கணக்காக காத்துக் கொண்டிருந்த படம், " நான் கடவுள்". பாலாவின் இயக்கம், எழுத்தாளர் ஜெயமோகன், இசை ஞானி என்று பலரும் கைகோர்த்திருந்ததினால் பலரும் போல நானும், நண்பரும் முதல் நாளன்றே இணையத்தில் பதிவு செய்து முன்று மணி ஷோவ்விற்கு திரையரங்கு சென்றோம். முதல் நாள் - எங்கும் இளவட்டம் - விசில், ஆ ஊ சத்தங்கள் என ஆராவாரத்துடன் பரபரத்தது.


டைட்டில் - ல் பாலா, இசை ஞானி பெயருக்கு ஆராவாரம், விசில்.....; படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் trailor - ல் பார்த்த 90% காட்சிகள் ; வரப்போவது என்ன ? அடுத்த சிலிர்ப்புட்டும் காட்சிகளில், இசையின் மிரட்சியில், அரங்கமே அமைதி... பாலாவின் மாயம் ... நம்மை இரண்டரை மணி நேரமும் கணமும் அசையாது நம்மை செலுத்துகிறது.

அது என்ன பாலா மாயம் ... தமிழ் திரை அறிந்திராத கதை களம்... நாம் அன்றாடம் காணும், ஆனால் அதிகம் பேசப்படாத மாந்தர்... அவர்களின் வாழ்வு ..இன்பதுன்பங்கள்..என்று காட்சி விரிய விரிய நெஞ்சு பதைக்கிறது. இனி தெருவோரம் அவரை காணும் போதெல்லாம் நம் நெஞ்சில், பார்க்கும் பார்வையில் ஒரு மாறுதல் நிகழ்வது நிச்சயம்.




அனுதினமும் இவர்கள் படும் கொடுமை.... அதை அறியாத சமூகம்... கண்டுக்கொள்ளாத அரசு... அந்த அவலத்திற்கு காசிற்காக விலை போகும் காவல் தெய்வங்கள்....இதற்கு தீர்வு தான் என்ன? தெய்வம் தான் உண்டோ ? இதைப் பொறுக்குமோ? பொங்கிஎழுமோ ? என்ற புள்ளியில் கதை உருவாகிறது.

இப்படத்தின் வலிமை ஜெயமோகனின் வசனம். தத்துவ விவரிப்பு, அவல வெளிப்பாடு, கதையோடு ஒன்றிய நகைச்சுவை,... வாய் சிரித்தாலும், நெஞ்சில் அவலம் படர தொனிக்கும் கிண்டல் பேச்சுகள் என அவரின் முத்திரையை ஆழப் பதித்திருக்கிறார்.

ரமண மாலையில் " பிச்சைப் பாத்திரம்" கேட்ட போது மனதில் எழுந்த எண்ணங்கள் வேறு... ஆனால்... இப்படத்தில், கச்சிதமாய் பொருந்தி வர ... புகழ்வது எழுதி உயிர் தந்த ராஜாவையா... காண காட்சியை உரு தந்த பாலாவையா... இருவரையும் தான்... சில இடங்களில் அமைதி... திடீர் அதிரடி... இம்முறை உடுக்கையும் கூட வந்து இசைஞானியின் re - recording ல் படத்தின் உணர்வு மேலோங்குகிறது.

யாரும் எதிர்பார்க்காத உருவில் பூஜா..அஹோரியாய் ஆர்யா...புதுமுகங்களா இவர்கள்... அப்படி தெரியவில்லை... ஒ.. இயக்கியது பாலா அல்லவா...ஆம், மாறுபட்ட கதை... நுண்ணி செதுக்கிய திரைக்கதை.... தோயவில்லாது செல்ல கோலிவுட் தர்பார்... எலியாரின் கிண்டல்கள்... வேறு என்ன வேண்டும்.... கதைதான் இப்படத்தின் நாயகன்.

சிலவிடங்களில் வரும் ஹிந்தி வசனங்களுக்கு தமிழில் subtitle கொடுத்திருந்தால் .... இன்னும் புரிந்திருக்கும். எனினும் அறிந்தவற்றில் மேலும் புரிய நிறைய உள்ளது..திரும்ப பார்க்க வேண்டும் எனும்படியான தத்துவார்த்த, கருத்துள்ள , சமூக படம்.

நான் கடவுள் - மனிதம் அறிவது எப்போது ?